Tuesday, May 21, 2013

நேரம் - (காலம்) கடந்து ஒரு விமர்சனம்..



படத்தின் கான்செப்ட்டே நல்ல நேரம் கெட்ட நேரம் சம்பந்தமானதுதான். ஆனா படம் பாத்த நொடியில இருந்து இந்த பதிவ
போட நேரம் கிடைக்காம அலைஞ்சது என்ன வகையான நேரம்னுதான் தெரியல.

’உலக சினிமா வரலாற்றிலேயே புதுமை எதுவும் இல்லாத திரைப்படம்’  போஸ்டர்லயே போட்டு ரவுசு பண்ணின டைரக்டர் படத்துலயும் நிறைய அலும்பு பண்ணி வெச்சிருக்காரு.
 
போன சூது கவ்வும் படத்துலயே நேரம் படத்துக்கான எனது எதிர்பார்ப்பை சொல்லி இருந்தேன்.. இந்த டைரக்டர் அல்போன்ஸும்  நலன், பாலாஜி, கார்த்திக் படங்களுக்கு வெட்டி ஒட்டும் வேலைய பாத்தவர்தான்.. 

என் நம்பிக்கை வீண் போகலை.. 

தட்டத்து மறையத்து.. மலையாளம் ப்ளாக் பஸ்டர் மூவியின் நாயகன் நிவின் பாலி..  இந்த ட்யூயல் மேக்கிங்ல ரெண்டு வெர்ஷன்லயுமே ஹீரோவா நடிச்சிருக்காரு.. செம பர்ஃபாமென்ஸ்.. வினித் சீனிவாசன் ஸ்கூல் ப்ராடக்ட் ஆச்சே!?.

இன்ப அதிர்ச்சியா நஸ்ரியா.. இத்தனை நாள் இந்த பொண்ணு எங்க இருந்தாளோ??  கேரளா டிவி ஆங்கராமா.. MUNCH ஸ்டார் சிங்கராமா..   அவ்ளோ அழகு!. ’ஒரு நாள் ஒரு கனவு’  படத்துல ஒரு ரோல் பண்ணதா ஞாபகம். நடிப்புல இம்ப்ரூவ்மெண்ட் இருந்தா... ம்ம்.. அதெல்லாம் கூட வேணாம் பொழைக்கத்தெரிஞ்ச பொண்ணா இருந்தா எல்லா உட்லயும் ஒரு ரவுண்டு வரலாம்..  சினிமா உலகம் அப்படித்தான் இருக்கு.. 

சரி.. படத்துக்கு போவோம்..

அமெரிக்காவுல தேள் கொட்டுனதால இங்க இருக்குற ஒரு கம்பெனியில நெரி கட்டுது..ஹீரோவுக்கு வேலை போயிடுது.  தங்கச்சி கல்யாணத்துக்கு சிம்ஹா கிட்ட கடன் வாங்கி மூணு மாசத்துல செட்டில் பண்ண வாக்கு ’வட்டி’யுறுதி தர்றாரு..

கடைசீ நாளு.. 
 
இந்த நேரத்துலதான்  சின்ன வயசுலர்ந்து பழகி.. ’பெருசான’ பின்னாடி கன்ஃபார்மா ஃபிகர்தான்னு உறுதிபண்ணி ஹீரோ காதலிச்சு   வந்த தம்பி ராமையா மகளும் இவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி ஹீரோ வெற்றிய தேடி வர்றாங்க.  (ஏன் டைரக்டர் சார்.. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு சொல்வாங்களே.. இந்த பழமொழி பொய்யா சார்? ஹீரோ ‘இவ இவ்ளோ ஃபிகரா வருவான்னு எதிர்பாக்கல”ன்னு சொல்றாரே? ) 
  
அன்னைக்கு வட்டி ராஜாவுக்கு பணத்த செட்டில் பண்ணாரா?  வட்டி க்ரூப்பால  கடத்தப்பட்ட ஹீரோயின காப்பாத்துனாராங்கறதுதான் மீதிப்படம்.

படம் என்னவோ செமயா இருந்தாலும் இப்படி கதைக்கான முடிச்சுகளைப் போட முதல் பாதி வரை முழுசா  ’நேரம்’ எடுத்து நம்மை சோதிச்சு இருக்காரு. 

ஆனா ’கதைச்சொல்லி’களாக இருந்த  சினிமா இயக்குனர்களுக்கு நடுவே,  இதுபோல சம்பவங்களை சினிமாவாக சொல்ல வந்த இந்த தலைமுறை இயக்குனர்களுக்கு சபாஷ் சொல்லிதான் தீரணும். 

இரண்டாம் பாதில இந்த 'Lag' ஐ எல்லாம் சரிகட்டும்விதமா படத்த விறுவிறுப்பா கொண்டுபோனதுல படம் ஜாலியா முடிஞ்சுடுது.. 


காஸ்டிங்ல அக்கறை காட்டியிருக்கும் இயக்குனர், கொஞ்சமே கொஞ்சம் கேரக்டர்களுக்கு நடுவே கதைய நகர்த்தினாலும், ஒவ்வொரு நடிகர்கள்ட்டயும் சிறப்பா வேலை வாங்கி இருக்காரு. தம்பிராமையா, சார்லி, நாசர், சிம்ஹா எல்லாருமே சிறப்பா பண்ணியிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்.

முதல் ப்ரிவியூவுலயே ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்த வாங்குனது சினிமா வட்டார பரபரப்பு.. 

பாடல்கள் ஹிட்டு.. RR  ராஜேஷ் முருகேசன்.. நல்லாதான் பண்ணியிருக்காரு. அதுவும் அந்த முக்கா மொழம் ப்ரொமோ பாட்டு அதிரி புதிரிதான்.

கேமரா.ஆனந்த்.சி.சந்திரன்..ஒளிப்பதிவு நல்லாவே இருக்கு ஆனா,  கட் இல்லாம நல்ல லென்த்தி ஷாட்கள் எடுக்கறதுதான் ட்ரெண்டுன்னு கெளப்பிட்டாங்க போல.  இந்த மாதிரி ஷாட்கள் எல்லாம் குறும்படங்கள் பாக்குற உணர்வைதான் உண்டாக்குது. காட்சிக்கு அவசியம்னா மட்டும் செய்யுங்கப்பா. மற்றபடி வழக்கமான சினிமா பாணிதான் சரி.   

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாம எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்.  

நன்றி..





Tuesday, May 7, 2013

அயராது முயன்றால் பிழையின்றி எழுதலாம்..





அதைத்தான் நானும் முயற்சி பண்ணிட்டிருக்கேன்..

வணக்கம் ட்விட்டர்/சந்து வாழ் மக்களே!!

முதலில் ஒரு தன்னிலை விளக்கம்:-

      பிழைதிருத்தி என்ற பெயரை சுமப்பதால் நான் தவறே செய்யாதவன் என்ற பொருள் கொள்ளவேண்டாம்.. உதாரணமாக பிழைகளை திருத்த உதவும் இந்த பதிவில் எத்தனை பிழை நேரப்போகிறது என்பது அவனுக்கே வெளிச்சம்..

மற்றபடி பிழைதிருத்தி என்பது இந்த சமூகத்தின் பிழைகளை திருத்த நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைத்துக்கொண்ட பெயர் என்று நீங்களாகவே ’காமாசோமா’வென்று முடிவெடுத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

இங்கு நான் சொல்ல முயல்வது எல்லாம் நம் சகட்விட்டர்கள் சகட்டுமேனிக்கு சரளமாக செய்கின்ற, என் சிற்றறிவிற்கு எட்டிய பிழைகளை சுட்டிக்காட்டத்தான்.. (உனக்கு எதுக்கு இந்த அப்பாடக்கர் வேலை??? என்று என் மூக்கில் குத்துபவர்களுக்கு.. என் பதில்..  இன்று போய் நாளை ’வாரு’ங்கள்.. என்பதுதான்..)


பிழைகள் பல்வகை!!

      அடிப்படை இலக்கணத்துக்கான குறைந்தபட்ச அறிவும், உங்களுக்குள்ளே வாதிடும் குணமும் இருந்தாலே தமிழ் உங்களுக்கு வசப்படத்துவங்கும்…

வல்லினம்    6 எழுத்துக்கள்  -   க ச ட த ப ற
மெல்லினம்   6 எழுத்துக்கள்  -   ங ஞ ண ந ம ன
இடையினம்   6  எழுத்துக்கள்  -  ய ர ல வ ழ ள

இதை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது..

ஒலி உணர்வில் ஒரே போன்று ’ன’ ‘ண’ ‘ந’ மற்றும் ’ர’ ‘ற’ இடமாற்றுப் பிழைகளை தொடர்ந்து வேறுபாடு அறிந்து படித்து எழுதுவதன் மூலமே தெரிந்துக்கொள்ள முடியும்..
உ.ம்: எரி – எறி.. உரிய (ஒன்றுக்கு சொந்தமான..) – உறிய (உறிஞ்சுதல்..)


அடுத்து சந்திப்பிழைகள்தான்..

சந்திப்பிழைகள் – பெரும்பாலும் ஒருமை பெயருக்கு பன்மை வினைச் சொல்லைக் கொண்டு முடிப்பது.. அதேப்போல பன்மை பெயர்ச்சொல்லுக்கு ஒருமையில் முடிப்பது.. மேலும் உயர்திணை பெயருக்கு அஃறிணை வினைக்கு உயர்திணை வினை என முடிப்பதுதான்.


1.   முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ‘ற்’ என்ற வல்லின மெய்யின் அடுத்து எந்த மெய்யெழுத்தும் சேர்க்கக் கூடாது..
உதாரணம் :  பயிற்ச்சி தவறு.. பயிற்சிதான்.. அதைப்போலவே  செயற்க்கை அல்ல செயற்கைதான்..  இயற்க்கை  - இயற்கை

இது புரிந்திருக்கும்.. அதேப்போல ’ற்’ என்ற இந்த வல்லின மெய் எந்த சொல்லின் இறுதியிலும் தொக்கி நிற்காது.. மற்ற எந்தவொரு மெய்யும் இறுதி எழுத்தாக வரலாம்..
     
2.   அடுத்து எப்போதெல்லாம் மெய்யெழுத்து சந்தியாக வரலாம் வரக்கூடாதென்பதை புரிந்துக்கொள்ளுதலும் நலமே..

பசிபிணி.. பசிப்பிணி இரண்டில் எது சரி..??

பசிபிணி – பசியும் பிணியும் என்று பிரித்து படிக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறதா..

ஏற்கனவே ஏடாகூடமாய் கருத்துப் புரிதல் கொண்ட நம் இணைய மக்களுக்கு இப்படியெல்லாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அதனால் பசிப்பிணி என்று வார்த்தையை அழகாக முடித்தல் நலம். பசியாகிய பிணி என்று பசி ஒரு நோயாக உருவகப்படுத்தியுள்ளது புரிகிறதா..

ஸோ ஸிம்ப்பிள்..

சந்தி இல்லாமல் சேரும் வார்த்தைகள் சேர்த்து உச்சரித்தால் அது வேறு பொருள் தருமா என சொல்லிப்பாருங்கள்.. தருமாயின் சந்தியை கோர்த்துவிடல் நலம்..

உதாரணம்.. ’வெட்டுக்குத்து’.. ஆஹா.. இது கொஞ்சம் ரணம்தான்.. வேற எதாவது சொல் எடுத்துக் கொள்ளலாம்.. (எடுத்துக்கொல்லலாம்னா அர்த்தமே மாறிடும்..)
தட்டுப்பாடு.. இதை தட்டுபாடு என்று எழுதினால் என்னவாகும்??
தட்டிக்கொண்டே பாட்டு பாடுதல் என்ற பொருளை கொள்ளுமல்லவா..
தட்டுப்பாடு என்றால் பஞ்சம் என்று நேரடியாக சொல்லி மேட்டரை முடித்துவிடலாம் இல்லையா?

பட்டுப்போனது.. பழசாய்டுச்சு / பட்டுபோனது பட்டு விற்றுபோனது, இனி என்னவெல்லாமோ பொருள் வருமே!!

அந்நிய மொழியினை நேரடியாக எழுதுவதில் இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லையாயினும் அதிலும் பொருள் மாறாமலிருக்க  கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது..

க ச ட த ப ற ஆறு வல்லின சொற்களில் இந்த ட வும் ற வும் சொல்லின் முதலில் வராது..  க ச த ப நான்கெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்..

கன்னி, சங்கு, தப்பட்டை, பாடை – யதேச்சையான உதாரணங்கள்தான்.. முதலில் உள்ளதை ஆராய்ந்தபடி இருந்தீர்களேயானால் பின்னால் உள்ளவை தானாக உம்மைச்சேரும்..  ச்சும்மா ஜாலிக்கு..  அப்புறம் இந்த சொல்லில் உள்ளதைபோல் எந்த மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வாரா.. இது ச்சும்மா ஜாலிக்கு..

3.   அடுத்து.. சுட்டெழுத்துக்கள் அ இ உ மூன்று மட்டுமே.. (உ எப்படி சுட்டெழுத்து என்று கேட்கிறீர்களா? உப்பக்கம் என்றொரு சொல் திருக்குறளில் வருகிறது.. இன்று ’உ’ வை பயன்படுத்தி வேறு எந்த சுட்டுச்சொல்லும் என் நினைவில் இல்லை..)

’அ’ ’இ’ ’உ’ சுட்டெழுத்துக்களும், எ என்ற வினா எழுத்தும் தனியாகவோ,சொல்லின் கடைசியில் இயம்பி வேறு சொல்லுடன் புணர்கையில் அது வல்லின எழுத்தில் துவங்கும் சொல் என்றால் (க ச த ப ) அந்த இடத்தில் வல்லினம் மிகும்..
அதாம்ப்பா.. அ + கரை, இதில் அ கரை என்ற சொல்லுடன் சேர்கையில் அக்கரை என்று வரும்.. க என்ற வல்லினம் க் எக்ஸ்ட்ராவாக வந்துள்ளது புரிகிறதா..

வந்துச் சென்றான் (து –வில் த் + உ / செ வில் ச் மிகுந்து உள்ளது)
குற்றப்பத்திரிக்கை (ற – ற் + அ / ப வில் ப்..)

4.   அடுத்து  ’ய்’ என்ற மெய்யெழுத்தின் அடுத்து வரும் வல்லினம் மிகும்..
உ.ம்: பொய்ப்பிரச்சாரம்.. ஓநாய்க்கிழவன், வாய்ப்பாட்டு இன்னும் நிறைய..

5.   அதேபோல ’ஐ’காரம்.. ஐ! காரம் இல்லை...
ஐகாரத்தினை தொடர்ந்து வரும் மெய்யெழுத்து மிகும்..

கீழைக்காற்று (ழை – ழ் + ஐ)
கைத்தொழில் / தைப்பூசம்

6.   ஒரு வினைச்சொல் ‘இ’ ’ய்’ ’ஆ’ ’ஊ’ ’என’ ’அ’ எழுத்துக்களில் முடிந்தால் அதன் அடுத்துவரும் சொல்லின் முன் வரும் மெய்யெழுத்து மிகும்..

(மிகும் மிகும்னே சொல்லுற இடத்துல எல்லாம் மெய்யெழுத்து எக்ஸ்ட்ரா போட்டுக்கணும் :0)

ஓட்டிச்சென்றான்  (டி = ட் + இ வருதா? அதான் ச் மிகுந்து வந்துடுச்சு..)
நெய்ப்பானை      (ய் வந்ததால பாவுல இருக்கும் ப் மிகுந்து வந்துட்டு..)
கூவாக்குயில்     (வா = வ் + ஆ )
உண்ணூச்சென்றான் (ஊ)   மெல்லத்தவித்தாள் (த்+அ)
பட்டெனச்சொல்கிறார் (என)

புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்..

7.   எதிர்மறை வினையெச்சம் (ஓடாது, பிடித்து ) மற்றும் எதிர்மறை பெயரெச்சங்கள் (சொல்லா.., அறியா..  ) போன்ற சொற்களின் அடுத்த சொல்லில் வரும் வல்லின மெய் மிகும்..

ஓடாதுக்கிடக்கும் / பிடித்துப்போட்டான்

க் ப் மிகுந்து வந்துள்ளது தெரிகிறதா..

8.   இரண்டாம் வேற்றுமை உருபு ’ஐ’ என்ற எழுத்தின் அடுத்து வரும் வல்லினம் மிகும்.
பிழையைத் திருத்தினான்,

இதுவே பெயர்ச்சொல்லாக உருவெடுக்கையில் பிழைதிருத்தி.. பிழையை திருத்துபவன் என்று உருவகப்படுவதால் வல்லினம் மிகவில்லை..

(குறிப்பு: சந்தி இடம்பெறும் சொற்களைச் சேர்த்து எழுதுதலும் பிரித்து எழுதுதலும் வசதியினைப் பொறுத்தது.. அதைக்குறித்து கவலைப்படவேண்டாம்)

9.   என இனி என்ற சொற்களின் அடுத்துவரும் வல்லினம் மிகும்..

லொள்ளெனக் குரைத்தான், சிட்டெனப் பறந்தான்,
இனித் தடங்கல் இல்லையெனக் கொள்..

10.  நான்காம் வேற்றுமை உருபு ‘கு’வின் அடுத்து வரும் வல்லினம் மிகும்..

சந்தைக்குச்செல்கிறேன்.. ‘கு’வின் அடுத்து ச் மிகுந்துள்ளது..

(இந்த வேற்றுமையுருபு சமாச்சாரத்த இன்னொரு பதிவுல சொல்லுறேன்..)


கடைசியாக..
உரிச்சொல்.. அதாவது அடுத்துவரும் சொல்லுக்கு பில்டப் கொடுக்கும் சொல்
’உரிச்சொல்’ என்று சொல்லப்படும்..
.
சாலச்சிறந்தது..  இதுல சால என்பது உரிச்சொல்..

மேலே சொன்ன பத்து மேட்டர நல்லா உள்வாங்கிட்டீங்கன்னா.. சந்திப்பிழை வராதுன்னு ஆணித்தரமா நம்பலாம்..



இன்னும் கொஞ்சம் சரி / தவறுகளை இதுல சொல்லுறேன்.. முடிஞ்சா மைண்ட்ல வெச்சுக்கங்க..


   பிழை                                    திருத்தம்
உடமை                                 உடைமை    
அதாவது                                அஃதாவது    
அழும்பு                                 அழிம்பு            
இரும்பல்                                இருமல்
அருகாமையில்                          அருகில்
கைமாறு                                கைம்மாறு
கருவேப்பிலை                           கறிவேப்பிலை
கடப்பாறை                              கடப்பாரை
என்னமோ ஏதோ                         என்னவோ ஏதோ
(இந்த பாட்டுக்கு கார்க்கிக்கு அவார்டெல்லாம் கிடைச்சது தனிக்கதை..)

ஒருக்கால்                               ஒருகால்
எண்ணை                               எண்ணெய்
ஊர்ச்சுத்தி                               உகிர்ச் சுற்று
கோடாலி                                கோடரி
கோமியம்                               கோமயம்
கோர்வை                               கோவை
சந்தணம்                                சந்தனம்
தொப்புள்                                கொப்பூழ்
மோந்து                                 முகர்ந்து                                
பொதுவுடமை                           பொதுவுடைமை
சமயல்கட்டு                             சமயற்கட்டு
துடக்கம்                                துவக்கம் / தொடக்கம்
மென்மேல்                              மேன்மேல்
ஞாயம்                                  நியாயம்
பதட்டம்                                 பதற்றம்
வல்லுனர்                               வல்லுநர்
சுதந்திரம்                                சுதந்தரம்
எந்தன் /உந்தன்                          என்றன் / உன்றன்
சிலது / பலது                            சில / பல
மோர்ந்து                                முகர்ந்து

அப்புறம் கீழே உள்ள சொற்கள் இரண்டுவிதமாக எழுதினாலும் தவறில்லை..

அக்கரை – அக்கறை / சில்லரை –சில்லறை / சலங்கை – சதங்கை / சேலை –சீலை / மதிள்சுவர் - மதில்சுவர் / மங்களம் – மங்கலம் / முறிந்தது – முரிந்தது/ ஆணை – யானை / வரட்சி –வறட்சி / மெல்ல –மெள்ள / எந்திரம் –இயந்திரம் / நடத்து –நடாத்து / உருண்டை – உண்டை / உழுந்து – உளுந்து /ஊசல் –ஊஞ்சல் / சிவப்பு – சிகப்பு


எழுதும் முறைகளிலும் சில பிழைகள் நேர்கின்றன..

சந்திகள் அல்லாது வரும் சொற்களை பிரித்து எழுதுவதால் பொருள் மாறும் வாய்ப்புகள் அதிகம்..

இவர் கள் குடிக்கிறார்கள்  - இவர்கள் குடிக்கிறார்கள்
அவன் இடம் கேட்டேன் – அவனிடம் கேட்டேன்
செல்லவேண்டும் ஆனால் – செல்லவேண்டுமானால்

பிரித்து எழுதி படிப்பவரை இம்சிக்காமல் இருப்போம்..

எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்தல் நலம்.. அப்படியும் எதுவும் தவறு தெரியவில்லை என்றால் அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் இடம் பிடிக்க நாள் பார்க்க வேண்டியதுதான்..

இனியென்ன.. இந்த பதிவில் கண்ட பிழைகளை கமெண்டுகளாக போட்டுத் தாக்குங்கள்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..

நன்னி,

கணேஷ் நாராயணஸ்வாமி

@pizhaithiruthi



Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - ஜாலியா கவ்வுங்க..

சூது கவ்வும் - செம கவ்வு..


நலன் குமாரசாமி, ‘ஒரு படம் பண்ணனும்’, ’நடந்தது என்னன்னா..’, ’துரும்பிலும் இருப்பர்’, என்று குறும்படங்களிலேயே தன்னை அடையாளம் காட்டியவர். 

கலைஞர் தொ.கா. வின் நாளைய இயக்குனர் சீஸன் ஒன்றில் முதலிடத்தில் ஜெயித்தவர், தன் நண்பர்கள் பாலாஜி (KSY), கார்த்திக் சுப்புராஜ் (PIZZA), பரணி (ந.கொ.ப.கா) ஆகியோருக்கு பின்னர் நிதானமாக களம் இறங்கியுள்ளார்.. 

(இன்னும் இவர்களின் குரு ‘காக்கா முட்டை’ –மணிகண்டன், இவர்களின் குறும்பட ஆஸ்தான எடிட்டரின் ’நேரம்’ படங்களுக்கும் நிச்சயமாய் காத்திருக்கலாம்)


கோடம்பாக்கத்தின் சினிமா கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்த குருகுல கலாச்சாரங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாமல் பல நாளைய இயக்குனர்களுக்கு சில உண்மைகளை வெளிச்சம்போட்டு மெய்பித்துக் காட்டியுள்ள இவர்கள் அனைவரும் நிச்சயம் தமிழ் சினிமா உலகின் இளம் பிரம்மாக்கள்தான்.

அட்டகத்தி, பிட்ஸா தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பில் படம் முடியும் தருவாயிலேயே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தால் வாங்கப்பட்டு.. இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

நல்ல படைப்புகளுக்கான வியாபாரம் இன்று இங்கே ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிடுவது ஆரோக்கியமான விஷயம்தான் இல்லையா?.

சூது கவ்வும் படத்தின் பாத்திரங்கள்கூட நலனின் குறும்படங்களின் கேரக்டர்களின் எஸ்டாபிலிஷ்டு வெர்ஷன்கள் என்பதும் கொஞ்சம் உண்மைதான்.. 40ப்ளஸ்களில் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு நியாயமான இரக்க சிந்தனையுள்ள நிறையவே எதிக்ஸ் பார்க்கும் கடத்தல் பேர்வழி.. அப்புறம் வேலையை இழந்த நண்பர்கள் நால்வர் ஒரு நல்ல ’குடி’ மாலைவேளையில் ஐக்கியமாகி இவர்களும் கடத்தல் வேலைக்கு இறங்குகிறார்கள். நிதியமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் அருமைபிரகாசத்தை கடத்தும் வேலையில் இறங்கி அதகளப்பட்டு ஒருவழியாக கரை சேர்வதுதான் கதை. 

மாமா டவுசர் கழண்டுச்சே.. கொஞ்சம் லூஸான பேண்ட் போட்டிருந்தால் சிரித்து நமது டவுசர் கழண்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஹீரோயின் கேரக்டர் உருவாக்கம்கூட நலனின் ஸ்பெஷல் ஏரியாதான்.  

அருமைபிரகாசம் திரும்பக் கிடைத்தாலும் அவனை கடத்தி தன் அரசியல் எதிர்காலத்தை குலைத்தவர்களை விடக்கூடாது என்று வாயைத்திறந்து பேசாத என்கவுட்டரர்.. இன்ஸ்பெக்டர் பிரம்மாவை (டப்பிங் செலவு மிச்சம்..) வரவழைக்க கதை சூடுபிடிக்கிறது. ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் காட்சி அரத பழைய ஸீன் டெக்னிக்குதான். ஆனாலும் செம ஃபிட்டான வில்லன்தான்.

நுண்ணிய காமெடி டயலாக்குகளும், அங்கங்கே நச்சென தெறிக்கும் வசனங்களும் படத்தின் ஸ்பெஷல் பலம். 



அங்கங்கே இருக்கும் சில லாஜிக் பொத்தல்களை சிரிப்பு தோரணங்கள் கவனிக்கவிடாமல் செய்துவிடுவதால் படம் முடியும் வரை  நம் குறுக்கு சிந்தனைகளுக்கு இடமே இல்லாமல் போகிறது.  

டெர்ரர் இன்ஸு எப்படி இவர்களை கொல்லாமல் விட்டார் என்று தெரிந்தவுடன், சேதுபதி வகையறாவிற்கு உதவி செய்யும் டாக்டர் கம் ப்ரொட்யூஸர்(??!!) தன் பின்முதுகினில் சொருகியிருக்கும் துப்பாக்கியினை சத்தமின்றி கீழே வைப்பது, வீட்டை விட்டு கிளம்பும்போது ஃபீலிங்ஸுடன் வீட்டை பார்த்து முகாரிக்கு போகும் சேதுபதியை ‘இதுக்கெல்லாம் டைம் இல்லை வாங்க தாஸ்!” என்று கட் பண்ணி இழுத்துச்செல்வது என படம் முழுக்க ஹியூமர் தூவல்கள்தான். 

எல்லாவற்றிற்கும் மேலாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ வுக்கு இந்தமாதிரியான விளக்கம்.. ஹாஹ்ஹா.., அய்யோ சாமி,  தியேட்டரே.. குறிப்பாக விஷயம் புரிந்த, மேற்படி வசனத்திற்கு விளக்கம் தெரிந்தவர்கள் சிரிப்புச்சத்தம்தான் நெடுநேரம் அடங்கவில்லை..

அருவருத்து முகம்  சுளிக்கும்படியான காட்சிகள் இல்லாததும் படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. 

ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் தன் டிரைவர் வேலையினை சிலாகித்துச் சொல்லும் கட்டில்லா லென்த்தி ஷாட்கள் போன்றவை ஒரு அறிமுக இயக்குனரின் தன்னம்பிக்கைக்கான ஷா(?)ட்சிகள்தான்.

இரண்டரை நிமிஷமே என்றாலும் கானா பாலாவின் காசு பணம் பாடல் செம வெஸ்டர்ன் கு்த்துதான்.. ஆண்ட்ரியாவின் குரலில் மாமா டவுசர் பாட்டும் நைஸுங்கோ.

இசை, இயக்கம், ஒளிப்பதிவு, கலை என எல்லாரும் புதுவரவுகள்தான்.. சிறு சிறு குறைகள் தென்பட்டாலும் அதை மெனக்கெட்டு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.. 


இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. அதனால.. டோரண்ட்ட தேடாமல் கிளம்புங்க தியேட்டருக்கு.


நிச்சயமாக சூதுகவ்வும் செம ஜாலியான படம்..