Sunday, March 30, 2014

இனம் - ஒட்டுபோட்ட இடமும் கிழிபடுகிறது!



இலங்கையில் துடிதுடிக்க கொல்லப்பட்ட தமிழ் இனத்தின் வலியை ஒரு மலையாளி (’தமிழனல்லாதவன்’ என்ற சொல்லாடல் இங்கே பொருந்தி வரவில்லை..) சொல்ல முயன்றால் எத்தனை உண்மைகள் திரிக்கப்படும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
தான் விதைக்கப்பட்டு வாழ்ந்து பின்னர் அங்கேயே சாகக்கடவது என்று சபிக்கப்பட்ட ஒரு இனத்தின் கொஞ்சம் ஜீவன்கள் தன் கூட்டைவிட்டு நகர மறுத்து அங்கேயே செத்துபோவதுதான் கதை.        


தன் திரைக்கதைக்கு வாகாய், ஈழப் புலிகளின் வாழ்வியலையும் நெறிமுறைகளையும் சொல்லாமல் தவிர்த்ததுதான் இந்த சினிமா இழைத்த முதல் அநீதி.

ஈழத்தவர், மலையகத்தமிழர்கள் இவர்களின் முன் பின் வரலாறு குறித்த பறைசாற்றல் ஏதுமின்றி பொளேரென ஹாஃப்வேயில் துவங்குகிறது கதை. செல்லடி பட்டு அழியும் உயிர்களின் கூக்குரல் வான்வழியே ’டிஜிட்டல் சிக்னல்’களாய் இம்மண்ணில் இறங்கிய நொடிகளில் நாம் செவிடர்களாய் வாழ்ந்திருந்தோம் என்ற குற்ற உணர்ச்சி நமக்குள் இன்னும் தீய்ந்து போய்விடவில்லைதான். 

ரஜினி என்ற பெண்ணின் அனுபவத்தை சொல்வதாக படத்தை துவங்குகிறார் இயக்குனர். ஒரு கடலோர கிராமத்தில் ’சுனாமியக்கா’ என்ற (சரிதா) பெண்ணின் அரவணைப்பில் வாழும் சில ’முதிர்ந்த!?’ சிறுவர் சிறுமியர்களிடமிருந்து கதையை சொல்கிறார். கதையும் ’செல்லடி’க்கு பயந்துவிட்டது போலும்! கடைசிவரை அங்கிருந்து நகரமாட்டேன் என்கிறது. ஒழுங்கற்ற திரைக்கதையின் போக்கில் கொஞ்சம் கவனம் ஈர்ப்பவன் ‘நந்தன்’ என்னும் மன்வளர்ச்சி குன்றிய சிறுவன்தான்.

தன் மனைவிக்கு கர்ப்பிணி வேஷம் போட்டுவிடும் கருணாஸின் வசனம் ஒன்று இப்படி ஒலிக்கிறது, “பத்து ஆம்பிளைக கூடும் இடத்தில் ஒரு சிலரின் பார்வை தப்பாகத்தான் இருக்கும், இந்த வேஷம் உனது பாதுகாப்பிற்குத்தான்” என்பதாக வருகிறது.  இது சிங்களவன் தமிழ் அப்பாவி பெண்களுக்கு இழைத்த வன்கொடுமைக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?. கற்பழிக்கப்பட்டது இயக்குனரின் குடும்பப்பெண்கள் இல்லையே என்ற இறுமாப்புதான்.

தமிழன் தன்னை எதைச் சொன்னாலும் சுரணையின்றி இளித்துக் கொண்டிருப்பான் என்பது அண்டை மாநில இயக்குனருக்கு தெரிந்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள படையின் கேப்டன் தன் படைவீரர்கள் வன்புணர்ச்சி செய்வதை தன்னால் தடுக்க முடியாமல் புலம்புவது போன்ற கேவலமான காட்சி ஒன்றும் இருக்கிறது. இதைக்கூட எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி பார்த்துவிட்டுதான் தியேட்டரிலிருந்து வெளியேறினேன்.   

இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால் இயக்குனர் சொல்ல வருவதன் சாராம்சம் பின் வரும் வடிவில் இருக்கலாம்.
  ”ஈழப்பெண்கள் கர்பிணியரோ, முதியோரோ அல்லாது இருப்பின், அவர்கள் கற்பழிப்புக்கு உகந்தவர்களே, எனவே தங்களை அவர்கள்தான் எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டும். சிங்கள போர் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துதான் நியாயத்தை நிலை நாட்டியுள்ளனர், புலிகளின் குழப்ப நடவடிக்கைதான் இதற்கு முழுமுதற்காரணம்... “ இதைப்போல இன்னும் நிறைய யோசித்துக்கொண்டே போனால் விரக்திதான் மிஞ்சுகிறது.

இது போன்ற படங்களை ஊக்குவித்து திரையரங்கம் வரை கொண்டுவந்து சேர்த்த ஒவ்வொருவனும் தமிழின துரோகிதான்.

இந்த படங்களின் அரசியல், இறையாண்மை பின்புலங்களை  புதியதலைமுறையின் ‘லக்கிகிருஷ்ணா’ போன்ற கூர்நோக்கும் எழுத்தாளர்கள் எழுதி அம்பலப்படுத்த காத்திருக்கிறேன்.

வருத்தங்களுடன்,
கணேஷ் நாராயணஸ்வாமி.

Saturday, March 22, 2014

குக்கூ - செல்லுலாய்ட் குயில்!




இளங்காலைப் பொழுதுகளில், ஆளற்ற வனங்களில் உலவும் அரவங்களை துயில் எழுப்பிவிட சுப்ரபாதம் இசைக்கும் குயில்களின் குரலினை கேட்டிருக்கிறீர்களா?!.. எனக்கு கால் சத வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது. நான் நடக்கும் பாதையை சற்று நழுவி அந்த குயிலின் முகம் காண விழையும்போது., தன் குரலை நிறுத்தி அடையாளங்களை மறைத்து காணாமல் போகும்


ஆனால் ராஜுமுருகனின் குக்கூவிற்கு நிலைமை நேர்மாறானது. கண்கள் கிடையாது, கேட்டலிலும் தழுவலிலும் மட்டுமே முன் நிற்பவரை உணர முடியும். பகலில் ரயிலில் வழிகாட்டும்ஒளிவிளக்கு விற்பதும், மாலை நாடக குழுவில் ராஜாவின் குரலில் பாடல் பாடுவதுமாய் நகர்கிறது வாழ்வு. இந்நிலையில் இவனது பயணத்தில் வந்து சேரும் இன்னொரு கண்ணற்ற படித்த(!?) குக்கூவுடன் இவர் சேர்ந்தாரா என்பது திரைக்கதை.


ராஜுமுருகன் விகடன் நிருபராய் இருந்த நாட்களில் தான் கடந்து வந்த மனிதர்களில் மறக்கமுடியாதவர் என அடையாளம் காட்டி, தினேஷின் கதையை சொல்லத்துவங்குகிறார். சங்கரின் ’S’ பிக்சர்ஸில் கதை சொல்லி அங்கே துவங்க இருந்த அவரது சினிமா பயணம் தாமதமாய் இந்த படத்தில் துவங்குகிறது. தனது முதல் வாய்ப்பையே கமர்ஷியல் பேக்கேஜுக்கு காவு கொடுக்காத இயக்குனரின் தைரியம் கொஞ்சம் ஆச்சர்யம்தான்.  

வட்டியும் முதலும்தொடரில் மனித உளவியல்களை வார்த்தைகளில் கோர்த்தவர்., செல்லுலாய்டில்கண்அற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைஒளிஓவியமாய் வரைந்திருக்கிறார். நல்ல தரமான படைப்பை தர முயன்றிருக்கிறார்.  ஆனால் தனக்கு தெரிந்த    பல விஷயங்களைஇன்னொரு படம் மூலம் சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்னவாகுமோ?!’ என்ற பதைபதைப்புடன் பல விஷயங்களை திணிக்க முயன்ற தொனி அங்கங்கே தெரிகிறது. ரசிக்கும்படியாகவே இருந்தாலும் சில இடங்களில் அவசியமின்றி காட்சிக்கு பொருந்தாமல் வந்துவிழும் அரசியல் வசனங்கள்  இதற்கு உதாரணம்.


இந்த சிறு நெருடல்களை மறக்கடிக்க வைப்பவைசந்திரபாபுஅண்டு கோவின் அட்ராசிட்டி அலப்பறைகளே. போனஸாக தினேஷின் நண்பராக வரும் அந்த மாற்றுத்திறனாளியின் கருத்து குத்துக்கள் பல இடங்களில் சிரிக்க வைத்துவிடுகிறது.


நல்லவர் என நினைப்பவரை கெட்டவராகவும், கெட்டவர் நினைப்பவரை நல்லவராகவும் சில இடங்களில் நேர்மாறாகவும் காட்டும் வழக்கமான சினிமா உத்திகள் சில இடங்களில் மட்டுமேவொர்க் அவுட்ஆகிறது.


நாயகி மாளவிகா, அலட்டலில்லாத நடிப்பில் முட்டைக் கண்களுடன் அழகாக வந்து போகும் அவருக்கு சினிமா உலகம் குட்டைப் பாவாடை மாட்டிவிட்டு அல்ட்ரா மாடர்னாக மாற்றும் வரை நிச்சயம் ரசிக்கலாம்.


குக்கூ பாடல்கள் அழகிய ஹைக்கூ கவிதைகள்தாம். அவைகளை இயக்குனர் நெருடலின்றி சரியான இடத்தில் பொதிந்திருக்கிறார். இளையராஜாவின் பாடல்களும் அப்படித்தான்.., அதிலும் அந்த ஆத்தாடி பாவாடை பாடலை முடித்தவிதம் மட்டும் இயக்குனரின் குசும்புக் கவிதை.


பெரிய பதற்றங்கள் எதுவுமின்றி நகைச்சுவையோடு நன்றாகவே கடந்துபோகும் முன்பாதியின் நிறைவு பின் பாதியில் சற்றுக் குறைவுதான். எல்லாம் சுமுகமாக நடந்துவிடுமென்று நினைக்கும் நிலையில் நாயகி நாயகனுக்கு என்ன நடந்திருக்கும் என்றுகூட தெரிந்துக்கொள்ள பொறுமையின்றி  தான் இருக்கும் பாதுகாப்பான சூழலை உடைத்து திடுமென காணாமல் போகிறார்.


இந்த சினிமாத்தனமான ட்விஸ்ட் திரைக்கதை அதுவரை கட்டிக்காத்த இயல்பான ஓட்டத்தை குலைக்கத்தவறுவதில்லை. ஒருவேளை இது உண்மைக் கதையாகவே இருக்கும் பட்சத்தில் அதற்கான காரணத்தை அசட்டையாக சொன்ன வகையில் இயக்குனரின் அனுபவ அளவீடாக எடுத்துக்கொள்ளலாமா?!


பல இயக்குனர்களை தனது மதிப்பெண்களால் மதிப்பீடு செய்யும் உத்தியின் மூலம் பல இயக்குனர்களின் கருவல்களை மார்பில் தாங்கும் விகடனின் செல்ல இயக்குனருக்கு அவர்கள் வைக்கப்போகும் விமரிசனத்தை விமரிசனம் செய்ய ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது!   


முதல் படைப்பு என்ற வகையில் நிறைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் சாமானியனின் ரசிப்புத்தன்மை இருந்தால் இந்த கூவல் பரவசமாகும், என்னளவில் எனது பால்யங்களில் நான் கானகத்துள் கேட்டு கடந்த கணங்களின்  பரவசம் இந்த குக்கூவில் கொஞ்சம் குறைவுதான்.