Wednesday, February 12, 2014

புலிவால் - கெட்டியா புடிச்சுக்கணும்!

புலிவால்  - திரைப்பார்வை

’கண்ணும் கண்ணும்’ பக்கமே இருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாரிமுத்து அவர்கள் இந்த ’புலிவால்’ ஐ பிடித்திருக்கிறார்.  மலையாளத்தில் வினித் ஸ்ரீனிவாசன் நடித்து ஹிட்டடித்த ’சாப்பா குரிஷு’ (சரியான உச்சரிப்புதானா..?!) என்ற காமெடி த்ரில்லர் கலந்த ’ஹைப்ரிட் ஜானர்’-வகையறா படத்தின் மறு உருவாக்கம்.  
திருமணம் வேறு (இனியா) பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட ’ப்ளேபாய்’ ப்ரஸன்னா தன் அலுவலக பெண்ணுடன் (ஓவியா) நடத்திய காமக் களியாட்டத்தை ஐ ஃபோனில் மொபைலில் பதிவு செய்திட.. அது ஒரு அசந்தர்ப்பவசத்தில் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த ஆப்பிள் ஃபோனின் மீதான ’முன்’ ‘பின்’ அனுபவமில்லாத விமல் அதை திரும்ப கொடுத்தாரா இல்லையா என்பதே பின் மீதிக்கதை.

2011ல் வெளியான மலையாள படத்தை தட்டி நகாசு வேலை பார்த்து இன்றைய ட்ரெண்டுக்கு மாற்றிய இயக்குனர் திரைக்கதை போக்கின் வலுவினையும் கவனத்தில் கொண்டிருக்கலாம்!.  முன்பாதி முழுக்க இரண்டு ஹீரோக்களின் சுவாரஸ்யம்  இல்லாத வழக்கமான காதல் காட்சிகள்.. திணிக்கப்பட்ட இரு டூயட்டுகள் என ஸ்லோமோஷனில் கிளம்பும் கதை செல்ஃபோனை தொலைத்தவுடன்  வேகம் பிடித்த பம்பரமாய் கிளம்பி அப்புறம் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுற்றி.. நம்மை சோதிக்கிறது. ’கானாங்குருவி’ அழகு பாடலுக்கு அரதப்பழசான நடன அசைவு அதிலும் விமலின் ’ஸ்பெஷல்’ மூவ்மெண்ட்டுகள் சலிப்புடன் ’உச்’சுக்கொட்ட வைக்கிறது.


இயக்குனர் ஜி.மாரிமுத்து அவர்களின் முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஸ்டைலிஷ்ஷான மேக்கிங்கிலும், அழகான கேமரா கோணங்களுக்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். வெட்டல் ஒட்டல் செய்த அஸோஸியேட் எடிட்டர் மப்பு ஜோதி ப்ரகாஷ் (கிஷோரின் அஸிஸ்டெண்ட்) எனது ரூம் மேட் என்பதால் அதை பெருமைப்படுத்தி சொல்வதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது! J
ஒருபுறம் ப்ரஸன்னா தனது கேரக்டரை சிறப்புற செய்து படத்தை நகர்த்துகையில் விமல் தன் சோகை விழுந்த நடிப்பை பயன்’படுத்தி’ கதையின் அஸ்திவாரத்தை வாருவதுடன் நம்மையும் படுத்தியெடுக்கிறார். இந்த மண்டு கேரக்டருக்கு இயல்பாகவே இவர்தான் பொருந்தி போவார் என்ற இயக்குனரின் கணக்கில் கணிசமான டேமேஜ்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

ரசிகர்களை தவறிக்கூட மூளையை பயன்படுத்த வைக்காத திரைக்கதை என்பதால் சுவாரஸ்யம் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?.  
விமல் வேலை பார்க்கும் டிபார்மெண்ட் ஸ்டோர் களம், விமலின் காதலி அனன்யா, சூரி, மற்றும் டார்ச்சர் மேனெஜர் தம்பி ராமைய்யா என அனைவருமே ’அங்காடித்தெரு’வின் EXTENSION’ல் வாழ்கிறார்கள்.

மைய கதை செல்ஃபோன் சார்ந்து இருப்பதால் சூரியின் காமெடி பக்கங்களை SMS ஜோக்குகள் வைத்து செய்ய நினைத்தது நல்ல ஐடியாதான் என்றாலும் சில இடங்களில் ஒட்ட வைத்த கலர் காகிதங்களாக கண்ணை உறுத்துகின்றன.


திருப்புமுனைகள் இல்லாத திரைக்கதை மட்டுமே படத்தின் ஆகப்பெரிய்ய்ய பலவீனம். மற்றவிஷயங்களில் படம் ஓகே ரகம்தான்.  

Saturday, February 8, 2014

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

  
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்.. அவர் பாட்டுக்கு தேமேயென்று வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்கையில் நண்பர் பத்மினி கார் ஒன்றைக் கொடுத்து தான் திரும்ப வந்து வாங்கிக்கொள்ளும்வரை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பார்த்த மாத்திரத்திலே பத்மினியை காதலிக்கதுவங்குகிறார் பண்ணை!.

தன் அடுத்த கல்யாண நாளுக்குள் காரை ஓட்டிப் பழகிவிட நினைக்கிறார் பண்ணையார்.  தாய் வீட்டிற்கு வந்தாலே எதையாவது பிடுங்கிச்செல்லும் மகளிடம் இருந்தும், என்றேனும் ஒருநாள் திரும்ப வந்து காரை கேட்கப்போகும் நண்பனிடமிருந்தும் காரை காப்பாற்றினாரா என்பதே மீதி வரலாறு.

ஜெயப்பிரகாஷின் சாந்தமான பாவனைகள் முழுக்க பண்ணையார் பாத்திரத்துக்கு ஓரளவுக்குதான் பொருந்தியிருந்தாலும் தன் தேர்ந்த (வழக்கமான!?) நடிப்பால் கடைசிவரை நிறைவு செய்ய முயன்றிருக்கிறார். 

ஊரில் கார் ஓட்டத்தெரிந்த ஒரே ஆள் விஜய்சேதுபதி முருகேசன் பாத்திரத்துக்குள் கச்சிதமாகவே சம்மணமிட்டு அமர்ந்துக்கொள்கிறார். இவரின் காதல் கதையின் நீளத்தை கூட்டுவதற்கு மட்டுமே உதவியிருக்கிறது!. கதையின் ஃபோகஸ் ’பத்மினி’மீதுதான் என்பதால் இந்த காதல் பெரிதாக மனதில் பதிய மறுக்கின்றது. 

டைட்டிலுக்கு நியாயம் செய்ய நினைத்து பண்ணையாருக்கு தன் மனைவியுடன் ஒரு காதல் எபிஸோட் நிகழ்த்தியதில் ஒருவித செயற்கைத்தனம் க்ரீமி லேயராய் பரவத்துவங்குவதை உணரமுடிகிறது!. 

படத்தின் உயிர்நாடியான கதையில் உயிரோட்டம் இருந்தாலும், இப்படி ஒரு எமோஷனல் ட்ராமாவை சரியாக படைக்க பெரிய்ய்ய்ய அனுபவ முதிர்ச்சி தேவை என்பது புரிகிறது. இந்த குறைதான் பண்ணையார்-மனைவி இருவரின் ரொமான்ஸ் காட்சிகளின் செயற்கைத் தனத்தனத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது. 

பண்ணையார் காரை ஓட்ட கற்றுக்கொண்டாரென்றால் தன்னை கழட்டி விடுவாரென்று நம்பி கற்றுத்தருவதில் தகிடுதத்தம் செய்யும் இடங்களில் நல்ல ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி. பின்னர் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் உள்ள புரிதல் உணர்வு அலைவரிசையின் தாக்குதலில் நிலைக்குலைந்து உண்மையாவே கற்றுக்கொடுக்கத்துவங்கிடும் காட்சிகளில் அபாரமான உணர்வுகளை கொட்டி தன் கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். 

நாயகி அட்டக்கத்தி ஐஸ்வர்யாவிற்கு பெரிய அளவில் இடமில்லாது போனாலும் பீடையாக வரும் பாலசரவணவன் பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டிவிடும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.  
டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பாஸ்மார்க் ஏரியாவில் இருப்பதால் அதனைக் குறித்த அலசல்களை விட்டுவிடுவோம்.

பல இடங்களில் திரைக்கதையில் தோய்வு இருந்தாலும்.. இதையே காரணம் காட்டி கமர்ஷியல் கப்ஸாக்களை நுழைக்காமல் விட்ட இயக்குனரின் நேர்மையை பாராட்டியேதான் ஆகவேண்டும்.
ஆனால் கல்லா கட்டுவதற்கான சினிமா யதார்த்தம் அதுவல்லவே. இன்னமும் ‘பூ’, ’தங்கமீன்கள்’ போன்ற உணர்ச்சி பூர்வமான சினிமாக்களை நெஞ்சில் அணைத்துக்கொள்ளும் கூட்டம் பேரளவில் உருவாகாத நிலையில் இது போன்ற சினிமா முயற்சிகள் ஓரங்கட்டப்படும் அபாயமிருக்கிறது.

படங்கள் மாறத்துவங்கிவிட்டன.. அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் பொறுப்பு ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

’ஆசுவாசமான மனநிலை’யுடன் படம் பார்க்கும் திறன் கைவரப்பெற்றிருந்தால் இந்த பத்மினியில் ஒரு ரசிக்கும்படியான சவாரி உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு! 

நன்றி! 

கணேஷ் நாராயணஸ்வாமி

Saturday, October 12, 2013

சாதகம் பாக்கலியோ!



சாதகம் பாக்கலியோ!
#சிறுகதை

காதலித்தவளையே கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்று முடிவானவுடன் முதலில் ஓடிப்போவது என்ற தீர்மானத்தைதான் என் காதலி அகிலாவிடம் முன் வைத்தேன்.  முதலில் அரைமனதாகசரிஎன்று சொன்னாள். அப்புறம் என்ன யோசித்தாளோ, ”எதற்கும் எங்கப்பாவிடம் வந்து ஒருமுறை பெண் கேளுங்கள், அவர் சம்மதிக்கவில்லை என்றால் அப்புறம் நாமே ஒரு முடிவிற்கு வரலாம்!” என்று தீர்மானமாய் மறுத்துவிட்டாள்.
      பரவாயில்லையே, இந்தளவிற்கு தந்தையை மதிப்பவளை காதலியாக பெற்றமைக்கு கொஞ்சம் ஓவராகத்தான் புளங்காகிதம் அடைந்தேன். இரண்டொரு நாளிலேயே தன் அப்பாவிடம் பேசிவிட்டு, ”அப்பா உங்களை பாக்கணும்னு சொல்லுறாரு, இன்னைக்கு சாயங்காலம் வாங்களேன்என்றாள்.
      மாலையே ஃபிரெஷ்ஷாக குளித்து, இருப்பதிலேயே டீஸண்ட்டான சட்டை ஒன்றை அணிந்துக்கொண்டு கிளம்பினேன். போகும் வழ்யிலேயே நான் என்னைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன். நானும் உலகில் சிறந்தது ஆன்ராய்டா, ஓஎஸ்ஸா? என குழம்பிக்கொண்டு அலையும் சராசரி ஹைடெக் சிட்டிஸன்தான். சாஃப்ட்வேர் ஜாப், கைநிறைய சம்பளம், கணிசமான பணம் சேர்ந்தபின்னர் ஊர்ப்பக்கம் சென்று இயற்கை விவசாயம், தோப்பு பண்ணை வீடு என்று செட்டிலாகிவிடும் எதிர்கால திட்டம். தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அந்த திட்டங்களை எல்லாம் ஓரங்கட்டி வைக்குமளவிற்கு என்னை மாற்றியது இந்த அகிலா என்ற அழகு ராட்சஸிதான்.
      அவள் என் டீமில் வந்து சேர்ந்து ஒரு வருடம் இருக்கும், நானும் என்னாலான ஆரிய வித்தைகள் அனைத்தும் மேற்கொண்டு என் வலையில் அவளை வீழ்த்த மேற்கொண்ட பிரயத்தனங்கள் கொஞ்சமா நஞ்சமா?. ஒரு வழியாக சம்மதித்து அவள் கொடுத்த காதலை, பிட்ஸா, பர்கர், கப்புச்சினொ என அனைத்து அன்னிய உணவுகளையும், ஊட்டி வளர்த்தேன். அது இப்போது வளர்ந்து இன்று அவள் வீட்டிற்கே சென்று பெண் கேட்கும் அளவிற்கு நிற்கிறது.   
      ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாமா?’ என்றபோது, ”அந்தளவிற்கு தைரியம் உள்ள உனக்கு ஏன் எங்கள் வீட்டில் பெண் கேட்க துணிச்சல் இல்லையா?” என்று என்னை ஒரே கேள்வியில் மடக்கி விட்டாள்

      டிவைன் அப்பார்மெண்ட்ல் அவர்களது கொஞ்சம் பெரியவீடுதான், என் கிராமத்து வீட்டைப்போல மூன்றுமடங்கு இருக்கும். கதவைத் தட்டியதும் அகிலாவின் அம்மாதான் திறந்தார்கள். லேசான புன்முறுவல்தான் வரவேற்பாய் கிடைத்தது. ஹாலில் அவள் அப்பா அமர்ந்திருந்தார். அவரின் இறுக்கமான முகம் எனக்கு நாசரை நினைவுபடுத்தியது. ”வாங்க!” என்ற ஒற்றைச்சொல்லுடன் சோஃபாவில் அமரச்சொல்லிய கையசைப்பு இனாமாய் வெளிப்பட்டது.
      என் சுயவிபரங்களை மேலோட்டமாய் கேட்டுக்கொண்டார்.  இங்க பாருங்க வினோத், எனக்கு ஜாதி முக்கியமோ இல்லையோ ஜாதகம் ரொம்ப முக்கியம், உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்திச்சுன்னா பாருங்க, உங்க வீட்டு பெரியவங்களோட பேசி ஒரு முடிவுக்கு வரலாம். அதுசரி.. உங்களுக்கு ஜாதகம் எழுதியிருக்குல்ல?” என்று கேட்டார். ”இருக்கு ஸார்!”என்றேன் அநேகமாய் என் வாழ்வில் நான்யோசிக்காமல்சொன்ன முதல் பொய்யாக இருக்கும்.
      மறுநாள் ஆஃபிஸ் வந்தவுடன் அகிலா கேட்ட முதல் கேள்விஎன்ன வினோத் ஜாதகம் கொண்டு வந்திருக்கியா?” என்பதே. “என்கிட்ட ஜாதகமே இல்லைஎன்றவுடன் ஷாக்காகி என்னை பார்த்தவள், “ஜாதகமே இல்லையா?, அய்யய்யோ, உனக்கு ஒரு ஜாதகம் இருந்து அது எனக்கு பொருந்தி.. போச்சு போ.. என்னடா செய்யப்போற?” என்று ஒரு பவுன்சரையும் வீசினாள். இந்த காதலிகளே இப்படித்தான் பட்டென்று ஆண்கள் மீது சுமையை இறக்கி வைத்துவிடுவார்கள்.
      சரி ஒண்ணு செய்யலாம், எப்படியும் ஜாதகம் எழுதணும், அதயே உன்னோட ஜாதக்த்தோட கம்பேர் பண்ணி பொருத்தம் வர்றமாதிரியே எழுதிடலாமே? என்னச் சொல்லுறே?” என்று ஒரு ஐடியாவை முன்வைத்தேன். ”ஃபோர்ஜரியா? அடப்பாவீ!என்று டென்ஷனாகிவிட்டாள்.
      முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கவே ஆயிரம் பொய்யைச் சொல்லலாம்னா.. நல்லா தெரிஞ்ச நாம ஏன் ஒரு பொய்யை சொல்லக்கூடாது?” என்ற என் நியாயமான வாதத்தை முன்வைத்தேன்.
      கரெக்ட்டா ஜாதகம் பாத்து வாழுறவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்கன்னு உன்னால சொல்லமுடியுமா?, இல்லை அப்படி பண்ணினவங்க எல்லாரும் டைவர்ஸ் ஆகாம     ஒன்னாத்தான் லைஃப்ல இருக்காங்கன்னும் சொல்லமுடியுமா? நம்மளுக்குள்ள நல்ல    மனசுப் பொருத்தமும் விட்டுக்கொடுக்கும்பக்குவமும் இருந்தா போதும் , இந்த ஃபோர்ஜரி ஜாதகமே உங்கப்பாவ சமாதானப்படுத்த   மட்டும்தான்ப்பா.. இல்லைனா நாம ஓடிப்போய்தான் கல்யாணம் கட்டிக்கணும்!” என்றேன்.
      அவளை சமாதானப்படுத்திவிட்டேன், ஆனால் இந்த போலிஜாதகம் எழுத அலைந்த பிறகுதான் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. நல்ல ஜோசியர் மட்டுமல்ல, போலி ஜோசியர்கள் கூடபோலியா ஜாதகம் எழுதமாட்டேன்!” என்பது நிச்சயமாய் விநோதமானஜாப் எதிக்ஸ்தான்.  அகிலாவிற்கு பொருத்தமான எனது பிறந்தநாளைக் கண்டுபிடிப்பதுவே மிகச் சிரமமான வேலையாய் போனது.
      ஒருவழியாய் கடையநல்லூரில் ஒரு முட்டுசந்தில் கிடைத்தவின்னர் டிவி புகழ்!?” ஜோதிடர் ஒருவருக்கு சுளையாய் ரெண்டாயிரம் வெட்டியவுடன் ஜாதகம் தயாரகத் துவங்கியது.  எழுதிக்கொடுத்த ஜாதகத்தை கையில் வாங்கியவுடன்தான் என் அலைச்சல் முடிவுக்கு வந்தது.  
      முதல் வேலையாக அகிலாவுக்கு சொல்லிவிடலாம் என்று அகிலா கையில வாங்கிட்டேன்என்று சொன்னதும் அவள் சொன்னதுதான் எனக்கு அடுத்த அதிர்ச்சி. “வினோத், எங்கப்பா நீ கொண்டு வர்ற ஜாதகத்தை எங்க குடும்ப ஜோசியர்ட்ட கொடுத்து கேப்பாராமா!”  என்றாள்.                       அதுனால என்னா பிரச்சினை?” என்றேன் அப்பாவியாய்.                                       புரியாம பேசாத வினோத், எல்லா ஜோசியர்களும் ஒருத்தர் சொன்னத இன்னொருத்தர்       ஏத்துக்கிட்டாங்கன்னா நாட்டுல எல்லா கல்யாணமும் காலாகாலத்துல நடந்துடுமே!?” என்றாள். தொடர்ந்துஎதுக்கும் நீ வேணா நம்ம ஜாதகத்தை  இன்னொரு ஜோசியர்கிட்ட கொடுத்து நம்ம பொருத்தம் எப்படின்னு கேட்டுப்பாரு, ஒரு ஐடியா கிடைக்கும்என்றாள்.
      சரியெனப்பட்டதால் மறுபடியும் ஒரு ஜோஸியரைத்தேடும் படலம் ஆரம்பமானது. முதலில் என் நினைவுக்கு வந்தவன், எனது நண்பர்களிலேயே ரொமப ஆர்தடக்ஸ் பார்ட்டியான சிவசு’.  அழைத்த ஐந்தாம் நொடியிலேயே போனை எடுத்தான். விஷயத்தில் இருந்த வில்லங்கங்களை மறைத்து, பேஸிக் விபரம் மட்டும் சொல்லி விளக்கம் வாங்கிக்கொண்டேன். 
      அடுத்தகணம் கோட்டூர் ஜோஸியரின் ஸ்பாட்டில் நான் ஆஜர். வரிசைக்கிரமத்தில் காத்திருந்து நான்காவது ஆளாக நுழைந்தேன். எங்கள் இருவரின் ஜாதகத்தின் எல்லா கட்டங்களையும் பார்த்தவர், “இது ஒத்தே வராத சம்பந்தம் தம்பி, இது புத்திரபாக்கியத்துக்கு உகந்த பொருத்தமல்ல. மாப்பிளைக்கு ஜாதகப்படி இருக்கிற இரண்டு தோஷங்களை நிவர்த்திபண்ணிட்டேள்னா, ஒருவேளை மண வாழ்க்கை சுகப்படலாம்.. “ என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். அதற்கு பின் அவர் சொன்ன கட்ட கணக்குகளின் பிணக்குகள் என் காதில் ஏறவே இல்லை. வாழ்க்கையே வெறுத்தே போனது.         
      யோசனையுடன் வெளியேறி பைக்கை நோக்கி நடக்கும்போதே அகிலாவின் போன். “சொல்லுஎன்றேன் விரக்தியாய். “என்ன ஆச்சு?என்றாள். நீ சொன்னாப்போலதான், இந்த ஜோஸியரு வேற மாதிரி சமப்ந்தமே இல்லாம என்னென்னமோ சொல்லுறாரு. குழப்பமா இருக்கு அகிலாஎன்றேன்.
      அன்று இரவெல்லாம் யோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். மறுநாள் அகிலா வீட்டின் அருகில் உள்ள கோவிலில் சந்திப்பதாய் ஏற்பாடு.  அகிலாவின் அப்பாவோடு அவரது குடும்ப ஜோதிடரும் வந்திருந்தார்.       கோவில் பிரகாரத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சென்று அமர்ந்தோம். அகிலா வரவில்லை. அவள் அம்மா மட்டும் உடன் வந்திருந்தார்.
      எந்த தயக்கமும் இல்லாமல் எனது ஜாதகத்தை எடுத்து கொடுத்தேன். ஓரங்களில் புதுமஞ்சள் பூசி இருந்ததை சந்தேகமாய் பார்த்தவர் கவரைப் பிரித்து பார்த்த்தும் எழுந்து நின்றே விட்டார். நிமிர்ந்து என்னை அதிர்ச்சியாய் பார்த்தவர் என் உறுதியான முகபாவத்தை உணர்ந்து மீண்டும் படிக்கத்துவங்கினார்.
      ஜோதிடரும், அகிலாவின் அம்மாவும் அவர் முகத்தின் ரியாக்‌ஷன்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். எனக்கும் மனதுக்குள் படபடவெனத்தான் இருந்த்து. 
      என்ன நினைத்தாரோ வினோத், என் இடத்துல யார் இருந்தாலும் இதப்பாத்து எப்படி கோப்ப்பட்டிருப்பாங்கன்னு தெரியாது., எனக்கு கோபம் வந்தாலும், அதையும் தாண்டி இதுல இருக்கும் நேர்மையும், உண்மையும் பிடிச்சிருக்கு அதவிட உங்க சமயோசிதம் ரொம்ப்ப் பிடிச்சிருக்கு, உங்கப்பா அம்மாவ வரச்சொல்லுங்க, மேற்கொண்டு பேசலாம் என்று கூறிமுடித்தார்.
      எனக்கு மனசுக்குள் படபடத்த அத்தனை உணர்வுகளும் பட்டாம்பூச்சியாய் பறக்க ஆரம்பித்தன. ஜோதிடர் “குடுங்க சார், கட்டங்கள்ல சிலது உங்களுக்கு புரியாது, நான் பாத்து சொல்லுறேன்என்று தன் வேலையை ஆரம்பித்தார். “வேண்டாம் ஜோசியரே, இது எல்லாருக்கும் புரியும்படியான ஜாதகம்! நாம சாமிய கும்பிட்டு கிளம்பலாம்..என்று சொல்லிவிட்டு இறுக என் கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு நகர்ந்தார்.
      அகிலாவிற்கு நான் சொல்லுவதைவிட அவள் அப்பாவே சொல்லும் வரை சஸ்பென்ஸ் வைக்கலாம் என்று முடிவுசெய்து அவள் போனுக்காக காத்திருக்க துவங்கினேன்.   
      டேய்.., என்னடா பண்ணினே.. அப்பா ரொம்ப ஹாப்பிடா, நான் தவிச்சே போனேன் தெரியுமா?. ஜாதகத்த மறுபடியும் எழுதிவாங்கிட்டயா?என்றாள்.
“இல்ல அகி, நானே என் ஜாதகத்த நானே எழுதிட்டேன்
என்னடா சொல்லுறே?!அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்
“ஆமா அகி, அந்த ஜாதகத்த உனக்கு மெயில்ல அனுப்பறேன்
சீக்கிரமா, எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல
      செல்போனை எடுத்து இந்த ஜாதகத்தை போட்டோ பிடித்து மெயிலில் அனுப்பிவிட்டேன். நண்பர்களுக்கு இன்னைக்கு பார்ட்டிக்கு வாங்கடா என மெஸேஜ் தட்டிவிட்டு கிளம்பினேன்.
      நான் அகிலாவின் அப்பாவிடம் கொடுத்த ஜாதகத்தின் காப்பி உங்களுக்கும் வேணும்னா, எனக்கு மெயில் அனுப்புங்க, அனுப்பி வைக்கிறேன்.
      என் மெயில் ஐடி இதுதான்.. yathaarthanvino@gmail.com.. ,
                சொல்ல மறந்துட்டேன் உங்களுக்கும் ஜாதகம் எழுதணும்னா எங்கிட்ட வாங்க!


            12                  1                  2                  3
உங்கள் சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம்!

முதலிடத்தில்: என் பெற்றோர்
இரண்டாமிடத்தில்: தங்கை, படிக்கிறாள், அவளை கடைதேற்றும் கடமை உள்ளது
பல தலைமுறையாக விவசாய குடும்பம்
எப்போதாவது கொஞ்சம் குடிப்பது உண்டு
ஆஃபீஸ் விழாக்களில் மட்டும்!
நா.வினோத் குமார்
ஜாதக கட்டம்
முதல் தலைமுறை பட்டதாரி
ஒரு ஃபிளாட் ஹயரில் வாங்கியுள்ளேன்
நேரம் தவறாமை என் சிறப்புகுணம்
உங்கள் மகளை முழுமையாக புரிந்து வைத்துள்ளேன்
சுயம் இழக்கமாட்டென், எந்த சூழலிலும், ஆனால் ஈகோ கிடையாது
சிகரெட், பாக்கு பழக்கங்கள் பழகிட வாய்ப்பு கிடைக்கவில்லை
முன்கோபத்தை முற்றிலும் குறைத்துக்
கொண்டேன்
            9                 8                   7                  6                                                       
      இதுதாங்க என்னோட ஜாதகம்! காப்பியடிச்சு எழுதாம, ஃபோர்ஜரி பண்ணாம சரியா எழுதுங்க பாஸு. நல்லாருக்கும் வாழ்க்கை!.
***